top of page

#T7.விண்ணப்பம்



உன் விரல் திலகம் என் நுதலில் வேண்டும்.

என் முகவானில் உன் முத்த நட்சத்திரங்கள் வேண்டும்.

உன் கைத்தலையணையில் தூங்கிட வேண்டும்.

நிலவாய் நீ உதிக்க என் காலை விடிய வேண்டும்.

உன்னாடை அழுக்கின் வாசம் நுகர வேண்டும்.

நான் பார்க்கையில் உன் கண்கள் சிரித்திட வேண்டும்

அந்தச் சிரிப்பின் இடைவெளியில் சிதைந்திட வேண்டும்.

என் கனவுகள் உன் கண்முன் நனவாகிட வேண்டும்.

நிறைவடையா உரையாடல் உன்னோடு வேண்டும்.

வார நாட்கள் ஏழும் ஞாயிராகிடல் வேண்டும்

நாளின் நேரம் யாவும் மாலையாகிடல் வேண்டும்.

கோடைக்காலம் உன்னால் காலமாகிட வேண்டும்.

உன் நுதல் போலாகிட நிலா தேய்ந்திட வேண்டும்.

உன் நடை பழகிட நதி சாலையில் ஓடிட வேண்டும்.

உன் உடை பழகிட வானவில் தரையில் வீழ்ந்திட வேண்டும்.

உன் வாசம் தேடி காற்று அலைந்திட வேண்டும்.

கதிரவன் குளிர் தேடி உன் கூந்தலில் குடிபுக வேண்டும்.

என் இன்றைய தேடலாய் நீ வேண்டும்.

என் நாளைய கற்றலாய் நீ வேண்டும்.

அருகிலே இருப்பாயானாலும் கனவில் நீ வேண்டும்.

எதிர்மறைக்கு நீ எதிர்ச்சொல் ஆகிடல் வேண்டும்

நேர்மறைக்கு நீ நேர்ச்சொல் ஆகிடல் வேண்டும்.

உன் மௌனங்களை யூகிக்கும் கலகங்கள் வேண்டும்.

பூவென என் விரல்கள் உன் கூந்தலில் பூத்திட வேண்டும்.

என் ஆசைகளின் வினையூக்கியாக நீ வேண்டும்.

காயங்களை உன் நம்பிக்கை ஆற்றிடல் வேண்டும்.

என் வாழ்வின் வரைபடமாய் நீ வேண்டும்.

சேருமிடம் தெரியா பயணங்கள் உன்னோடு வேண்டும்.

love,

Mani kannan

Click here to subscribe...


 
 
 

Comments


bottom of page